Thursday 23 April 2015

சுயமரியாதைப் பெண்கள்

கீழ்வீட்டுப் பெண்மணி ஒருவர் இன்று காலையிலேயே உரத்த குரலில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். எவ்வளவு உரக்க என்றால் கீழ்த்தளத்திலுள்ள அவர் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு பேசியது இரண்டாம் தளத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த என் காதுகளில் சன்னமாக விழும் அளவிற்கு. அவர் பேசியதின் (!!!) மன்னிக்க ..... கத்திக் கொண்டிருந்ததின் சாராம்சம் இது தான். அவர் வீட்டில் சமையல் மற்றும் இதர வேலைகளைச் செய்ய புதிதாய் வரப்போகும் பெண்மணி விதித்த நிபந்தனைகள் குறித்து ஃபோனில் வேறொருவருடன் அவர் விவாதித்துக் கொண்டிருந்தார்.

1) அன்றைய சமையலுக்கான பட்டியலை முதல் நாளே தெரிவித்து விட வேண்டும்.
2) சமையல் செய்யும் நேரத்தில் வீட்டினர் தொந்திரவு இருக்கக் கூடாது.
3) எக்காரணம் கொண்டும் பட்டியலில் சொல்லப்படாத உணவு கூடுதலாக சமைக்கப்பட மாட்டாது.
4) வீட்டினரின் உள்ளாடைகள் தவிர மற்றவை வாஷிங் மெஷினில் துவைத்து தரப்படும்.
5) சமைக்க  உபயோகிக்கும் பாத்திரங்கள் தவிர எச்சில் பாத்திரங்கள் கழுவப்பட மாட்டாது.
6) ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
7) மாத சம்பளம் பிரதி மாதம் 5ம் தேதி கொடுக்கப்பட வேண்டும்.

ஃபோனில் இவர் கத்திக்கொண்டிருந்தது வேலைக்கு வரப்போகும் பெண்மணியைப் பரிந்துரைத்த உறவுக்கார பெண்ணிடம் தான். அதற்கு மேல் நில்லாமல் என் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தேன்.

மனதுக்குள் என் அலுவலக நாட்கள் நினைவுக்கு வந்தது. அதுவொரு கட்டுமானக் கம்பெனி. தினமும் பல்வேறு ஆட்கள் வந்து போகக்கூடிய இடம். ஆஃபீஸ் பாயில் இருந்து எம்.டி வரை அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சூழல்.

ஒருநாள் ஹவுஸ்கீப்பிங் அக்காள் விடுமுறை எடுத்த தினத்தில் ஆஃபீஸில் பெரிய அளவிலான மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக மீட்டிங் ஆரம்பித்த நேரத்தில் ஆஃபீஸ் பாய் ஒரு அவசர வேலையாக பக்கத்திலிருக்கும் ஆர்க்கிடெக்ட் ஆஃபீசுக்குச் சென்று விட மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் எடுத்துச் செல்ல ஆளில்லாமல் போனது.

இண்டர்காமில் ரிசப்ஷனிஸ்டை அழைத்த எம்.டி அனைவருக்கும் தேநீர் கொண்டு வருமாறு பணிக்க அவரோ ஆளின்றி திணறிப் போய் விட்டார். ரிஸப்ஷனிஸ்ட் எம்.டியிடம் மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவர். வேலைக்குச் சேர்ந்து வெகு சொற்ப மாதங்களே ஆகியிருந்தது. அத்தோடு அப்போது நிறைமாத கர்ப்பிணி வேறு. அக்கவுண்ட் செக்‌ஷனில் இருந்த அத்தனை பேரும் ஆடிட்டிங் வேலையில் பிஸியாக இருந்ததால் எவரையும் அழைக்க முடியவில்லை போலும். எனக்கு போனில் அழைத்து விஷயத்தைச் சொன்னதோடு வேறு வழியின்றி தேநீர் கோப்பைகளை அவரே எடுத்துச் செல்லப் போவதாகவும் ஏதேனும் தொலைபேசி அழைப்புகள் வந்தால் என்னுடைய கேபினில் இருந்தே அவற்றை அட்டெண்ட் செய்து பேச முடியுமாவெனவும் கேட்டார்.

அவரைச் சற்றுப் பொறுத்திருக்கச் சொல்லிவிட்டு ஆஃபீஸ்பாயின் நம்பருக்குப் போன் செய்து உடனடியாய் அவரை ஆஃபீசுக்கு வரச்சொல்லி பணித்து விட்டு எம்.டியிடம் இண்டர்காமில் காஃபி மெஷினில் சிறு கோளாறு இருப்பதாகவும் வெளியே சென்றிருக்கும் ஆஃபீஸ் பாய் வந்தவுடன் தேநீர் வாங்கி வரச் செய்து அனுப்புவதாகவும் தகவலளிக்கச் சொன்னேன்.

அவரும் அப்படியே செய்துவிட, வெகு சில நிமிடங்களிலேயே விரைந்து வந்த ஆஃபீஸ் பாயிடம் தேநீர் கோப்பைகளை மீட்டிங்கில் வந்தவர்களுக்குக் கொடுக்கச் செய்தோம். பரபரப்பும் பயமும் விலகியவுடன் ஒரு பெருமூச்சை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட ரிஸப்ஷனிஸ்ட் என்னிடம் “ரொம்ப தேங்க்ஸ் மேடம்…. நல்ல நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணீங்க. இல்லேன்னா நாந்தான் எல்லாருக்கும் டீ எடுத்துட்டுப் போக வேண்டியிருந்திருக்கும். ரிஸப்ஷன்ல இருந்தா இந்த வேலையெல்லாம் கூட செய்ய வேண்டியிருக்கு பாருங்க” என்று அலுத்துக் கொண்டார்.

அவரிடம் “ரிசப்ஷன்ல இருந்தா இந்த வேலையெல்லாம் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. நீங்க கன்ஸீவா இல்லாம இருந்திருந்தா கூட நான் போக வேண்டாமின்னு தான் சொல்லியிருப்பேன். உங்களுடைய வேலைகள்ல நீங்க தெளிவாகவும் திறமையாவும் இருந்தா போதும். உங்களுக்கு விருப்பமில்லாத இந்த வேலைகளை நீங்க எப்போதும் செய்ய வேண்டியதில்லை”ன்னு சொல்லிட்டு வந்தேன்.  


வீட்டுவேலை செய்யும் பெண்களென்றால் மிகுந்த இளக்காரத்துடனும் அடிமையாகவும் நிறைய வீடுகளில் நடத்தப்படுகின்ற சூழ்நிலையில் தனக்கான வேலைகள் மற்றும் சுதந்திரம் குறித்து தானே தீர்மானித்து சகலமும் வரையறுத்து இதற்கு சம்மதமென்றால் உன் வீட்டில் நான் வேலை செய்யத் தயாரென்று தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும் அந்த முகமறியாப் பெண்மணியிடம் மிகுந்த மரியாதை உண்டாகி இருக்கிறது.   

2 comments:

  1. அருமையான பதிவு ஸ்ரீ

    ReplyDelete
  2. அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete