Saturday 25 April 2015

டிராஃபிக் “ஆட்டோக்காரர்”

இன்று சனிக்கிழமையாதலால் வேளச்சேரி 100 அடி ரோடில் அளவுக்கதிகமான டிராஃபிக். எந்த நிமிடமும் பறக்கத் தயாராய் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி பரபரத்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், குறைந்தபட்சம் நான்கு பேரைக் கொண்ட மிடில்கிளாஸ் ஃபேமிலியைச் சுமந்தபடி  நிறைமாத கர்ப்பிணி போல திணறிக்கொண்டிருந்த டூவீலர்கள்  , வீக் எண்ட் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளக் கிளம்பிய பார்ட்டி மூட் பார்ட்டிகளை சவாரிகளாகக் கொண்ட ஆட்டோக்கள், பஸ்கள், கார்கள் என ஆளாளுக்குத் தெரிந்த மொழியில் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அவர்களுக்கு முன்னால் இருந்த டூவீலர், கார், ஆட்டோக்காரர்களைத் திட்டிக் கொண்டும் ஹாரன் அடித்துக்கொண்டும் ஒரு பெரும் யுத்தபூமி போலக் காட்சியளித்த அந்த இடத்தை விட்டு யாரும் ஒரு அடி கூட அசைய முடியாதபடி எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடக்க யாரும் எதிர்பாராமல் சட்டென்று ஒரு பக்கத்தில் வாகனங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு விரைவாக நகரத்தொடங்கின.

அத்தனை நேரம் எங்கேயோ போயிருந்த டிராஃபிக் போலீஸ் தான் கடைசியில் வந்துவிட்டார் போல எனப் பெருமூச்சு விட்டபடி நாங்கள் வாகனங்கள் நகர்வதை கவனித்துக் கொண்டிருக்கும் போது தான் சாலையில் ஒரு ஓரத்தில் நின்றபடி வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் தென்பட்டார். 

உள்சட்டைக்கு மேல் பட்டன்கள் போடாத காக்கிச்சட்டை அணிந்து சாலையின் ஒருபக்கம் நின்றபடி கணீரென்ற குரலில் மறுபக்க வாகனங்கள் அனைத்தையும் ஒரு தேர்ந்த  டிராஃபிக்போலீஸின் லாவகத்தோடும் சைகையோடும் விரைவாகக் கடந்து போகும்படி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த அந்த மனிதர் ஒரு ஆட்டோக்காரர். ஆட்டுமந்தைகள் போல அத்தனை பேரும் அவரவர் இடத்தில் நின்றபடியே கத்திக்கொண்டிருக்க சாலையின் ஓரத்தில் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் இப்படி களத்தில் இறங்கியிருக்கிறார். யார் எப்படிப் போனால் என்ன என்று அவரும் கூட வேடிக்கை பார்த்துக்கொண்டோ அல்லது சவாரி ஏதும் கிடைத்தால் தானும் அந்த மந்தையில் ஒருவனாக வெறுமனே நின்றுகொண்டோ கூட இருந்திருக்க முடியும். ஆனால் அத்தனையையும் மீறி பொதுநலத்தோடு அவர் செய்த காரியத்தை நிச்சயம் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாராட்டிவிட முடியாது.


எங்கள் பக்கம் வாகனங்கள் நகரத் தொடங்க நாங்களும் முன்னோக்கி அவரைக் கடந்த கணத்தில் ”தேங்க்ஸ் அண்ணா …சூப்பர்” என்று சத்தமாக நானும் உதயசங்கரும் கத்தியது கூட அவர் காதுகளில் விழுந்திருக்கவில்லை. 

1 comment: